Saturday, February 7, 2015

தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர்


தப்லீக் ஜமா அத்தை விட்டு தவ்பா செய்த தஃலீம் புத்தக வெளியீட்டாளர் மக்களை ஐந்து நேரத் தொழுகைகளுக்கு அழைக்கின்ற பணி நிச்சயமாக சிறந்த பணியாகும். இதை இன்றைய தப்லீக் இயக்கத்தினர் சிறப்பாகச் செய்கின்றனர். அதே சமயம் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு, மக்கள் செய்கின்ற எண்ணற்ற தீமைகளை அவர்கள் கண்டு கொள்வது கிடையாது. கப்ர் ஜியாரத் என்ற பெயரில் மக்கள் செய்கின்ற ஷிர்க் எனும் கொடிய பாவத்தைக் கண்டுகொள்வது கிடையாது. வட்டி, வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். சுருங்கக் கூறின் நன்மைகளை மட்டும் அதிலும் குறிப்பாக தொழுகையை மட்டும் ஏவுவார்கள். எந்தவொரு தீமையையும் தடுக்க முன்வரமாட்டார்கள். தீமையைத் தடுப்பது சாதாரண பணியல்ல. கை கால்களைப் பதம் பார்க்கக் கூடிய, கண்ணீரையும் செந்நீரையும் வரவழைக்கும் மிகக் கடினமான பணி என்பதை, செய்து பார்த்தால் தான் தெரியும். அதனால் தான் அல்லாஹ் அழைப்புப் பணியைப் பற்றிக்குறிப்பிடும் போது, நன்மையை மட்டும் ஏவுங்கள் என்று சொல்லாமல் தீமையையும் தடுக்கச் சொல்கின்றான். (பார்க்க அல்குர்ஆன் 3-104, 3-114, 9-71) அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொன்னால் யாரும் கோபப்படுவது கிடையாது.அதே சமயம் இறந்து விட்டவர்களிடம் உதவி தேடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும்போது தான் மக்கள் கொந்தளிக்கின்றார்கள். திட்டுவதற்கு மட்டுமல்ல, வெட்டுவதற்கும்முன் வருகின்றார்கள். எனவே தீமையைத் தடுப்பது மிகப் பெரிய பணி. இதை தப்லீக் இயக்கத்தினர் புறக்கணித்து வருகின்றார்கள். இது இவர்களிடம் உள்ள அடிப்படையான தவறாகும். அடுத்து இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என்றால் இவர்களுடைய வேதம்(?). அதுதான் இவர்களால் பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் வாசிக்கப்படும் தஃலீம் தொகுப்பாகும். இதற்கு இவர்கள் திருக்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தான் இவர்களது வேதம் என்று நாம் சொல்ல வேண்டியுள்ளது. இவர்கள் தொழுத பிறகு தஃலீம் புத்தகத்தை வாசிக்கும் போது, “இதற்குப் பதிலாக அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆனின் தமிழாக்கத்தைப் படியுங்கள். அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதல் அடங்கிய ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பைப் படியுங்கள்”என்று சொன்னால் போதும். இவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும்.முகம் அனல் பிழம்பாகி விடும். குர்ஆன், ஹதீஸ் எல்லாம் பாமர மக்களுக்கு விளங்காது என்று உருப்படாத பதிலை உதிர்ப்பார்கள். ஜக்கரியா மவ்லானா போன்றவர்கள் எழுதிய தஃலீம் தொகுப்பு எளிதாக மக்களுக்கு விளங்குமாம். ஆனால் அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் விளங்காதாம். இதையெல்லாம் பொருட்படுத்தாது நாம் குர்ஆனின் பொழிபெயர்ப்பை வாசித்துவிட்டால், இனிமேல் பள்ளிவாசலில் யாரும் குர்ஆன் பொழி பெயர்ப்பை வாசிக்கக்கூடாது என்று தடை விதிப்பார்கள். இந்தக் கொடூர நிகழ்ச்சி சமீபத்தில் ஓர் ஊரில் நடந்தேறியது. இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக்கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். (அல் குர்ஆன் 74-49,50,51) என்று அல்லாஹ் கூறுவது போல் இவர்களது நடைமுறை அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குர்ஆனை வாசிக்கக் கூடாது என்று சொன்னால் உடனே நாம் கொந்தளிப்போம். அதே சமயம் இந்தக் கருத்தை சமுதாயத்தில் உள்ள தப்லீக்காரர்கள் சொன்னால் அதை நாம் கண்டு கொள்ள மாட்டோம். இது என்ன நியாயம்? இது தப்லீக் காரர்களின் அடிப்படையான மாபெரும் இரண்டாவது தவறாகும். புரிந்து கொள்வதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறியுள்ளோம். இன்னும் இது போன்று தவறுகள் பல அவர்களிடம் மலிந்து கிடக்கின்றன. இவர்கள் வேதமெனக் கொண்டாடும் தஃலீம் புத்தகத்தில் மலிந்து கிடக்கும் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பட்டியல் போடுவதென்றால் இந்த இதழ் தாங்காது. எனவே இந்த தப்லீக் இயக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற நாம் பெரும்பாடு பட்டாக வேண்டும். இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை விட, நபிகளாரின் பொன்மொழிகளை விட தஃலீம் புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால், ‘ஃபழாயில் அஃமால்’ போன்ற நூல்களைப் பெருமளவில் அச்சிட்டு வெளியிடும் மிகப் பெரிய நிறுவனமான ‘இதாராஇன்ஷாஅத் இ தீனிய்யா’ என்ற பதிப்பகத்தின் உரிமையாளர் முஹம்மது அனஸ் என்பார் தப்லீக் இயக்கத்திலிருந்து தவ்பா செய்து தவ்ஹீதை, குர்ஆன் ஹதீஸை மட்டும் தமது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டுள்ளார். இனி இது போன்ற தஃலீம் தொகுப்புகளைஅச்சிடுவதில்லை என்றும் அவற்றை விற்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளார். இது போல் பல சகோதரர்களும் தவ்பா செய்து உண்மையான தவ்ஹீதுடைய பாதைக்குவர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் செய்வானாக. குர்ஆன், ஹதீஸைத் தனது வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஏகத்துவத்தில் வெளியிடப்படுகின்றது. அதைப் பார்த்து, பலருக்கும் படிக்கக் கொடுத்து பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஷிர்க்கான கருத்துக்கள் கொண்ட புத்தகங்கள் விற்பதை நிறுத்தி விட்டேன் முஹம்மது அனஸ் அவர்களின் பேட்டி தப்லீக் ஜமாஅத்திலிருந்து தவ்பா செய்த முஹம்மது அனஸ் அவர்களிடம் பேட்டி கண்டபோது அவர் தெரிவித்ததாவது- மார்க்கச் சட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஹனஃபி ஃபிக்ஹ் நூல்களை நான் நாடினேன். இவ்வாறு நாடுவதற்குக் காரணம், ஹனஃபி நூல்கள் தான் எங்களுக்கு மார்க்கச் சட்ட நூல்கள் என்று தெரிவிக்கப்பட்டு, அந்தச் சூழலிலேயே நாங்கள் வளர்ந்திருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காக அந்நூல்களில் தீர்வை நாடினால் ஏதாவது ஒரு ஆலிம் அல்லது ஒரு ஷைஹ் தனது கருத்தைத் தெரிவித்திருப்பாரே தவிர குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்தவொரு விடையையும் நான் காணவில்லை. அதனால் குர்ஆன் ஹதீஸிலே நான் நேரடியாகப் பார்க்க முற்பட்ட போது, ஃபிக்ஹ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் தீர்வுகளுக்கும் குர்ஆன் ஹதீசுக்கும் இடையில் பெரிய வேறுபாட்டைக் கண்டேன். இப்போது குர்ஆன் ஹதீஸில் முழுமையாக நான் களம் இறங்கி விட்டேன். இதனால் இப்போது என்னைச் சுற்றி இருப்பவர்களால், குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்களின் சிந்தனையில் வார்க்கப்பட்டவர்களால், நான் ஒரு மாபெரும்பாவத்தைச் செய்தவன் போல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கப் படுகின்றேன். நாம் குர்ஆன் ஹதீஸிலிருந்து விஷயங்களைத் தெரிந்தவுடன் அதைப் பின்பற்றஆரம்பித்தது தான் அவர்களுடைய பார்வையில் நான் செய்த மிகப் பெரும் தவறாகும். என்னுடைய உறவினர்கள் எல்லோரும் தங்களது முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.என்னுடைய மகனுக்கு நான் நபிவழியில் திருமணம் நடத்தி வைத்த போது அதற்காக எந்த வித சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் நடத்தவில்லை. என்னுடைய மகன் ஊர்வலமாக மணமகன் கோலத்தில் அழைத்து வரப்படவுமில்லை. இது எனது உறவினர்களை மேலும் ஆத்திரமூட்டியது. ஒரு கார் மட்டும் ஏற்பாடு செய்து என்னுடைய மருமகளை அழைத்து வந்தேன். ஹிஜாப் சம்பந்தப்பட்ட சில சிடி-க்களைக் கேட்டு விட்டு என்னுடைய கண்களில் நீர் வழிந்தோடியது. இவ்வளவு நாள் நாம் ஏன் இது போன்ற ஒருஹிஜாபைப் பின்பற்றாமல் இருந்து விட்டோம்? என்று வருந்தி அன்றைய தினத்திலிருந்துமார்க்க அடிப்படையில் கணவனுடைய சகோதரனிடம் கூட ஹிஜாபைப் பேண ஆரம்பித்து விட்டோம். பேட்டியாளர் : குர்ஆன் ஹதீஸின் பக்கம் உங்களை ஈர்த்தது எது? முஹம்மது அனஸ் : அஹ்லே ஹதீஸின் வலை தளமான www.ahlehadees.com-ம் ஷைஹ் அதாவுல்லாஹ் தர்வி, ஷைஹ் ஷஃபியுர்ரஹ்மான் முபாரக்புரி, ஷைஹ் மிஃராஜ் ரப்பானி, ஷைஹ் பதீவுத்தீன் ராஷிதி ஆகியோர் ஆற்றிய ஒலி நாடாக்களைக் கேட்டதும் தான் என்னை இந்தக் கருத்தின் பால் அழைத்து வந்தது. (அஷ்ரஃப் அலீ தானவி எழுதிய, தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களின் வெளியீடான) ‘அஃமாலே குர்ஆனி’ என்ற நூலில் உள்ள ஒரு செய்தியைப் பற்றி ஷைஹ் மிஃராஜ் ரப்பானி அவர்கள் ஆற்றிய ஓர் உரையைக் கேட்டேன். அதில் அவர் குறிப்பிட்ட அந்தச் செய்தியை* அஃமாலே குர்ஆனி நூலில்பார்த்து விட்டு மிகவும் வெட்கப் பட்டேன். வேதனைப் பட்டேன். அந்த நூலை விற்கக்கூடாது என்று என்னுடைய பதிப்பக ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு விட்டேன். இதுபோன்று ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்ட புத்தகங்களை விற்பதையும் நான் நிறுத்திவிட்டேன். அஃமாலே குர்ஆனி என்ற நூலில் இடம் பெற்றுள்ளதாக முஹம்மது அனஸ் அவர்கள் குறிப்பிடும் செய்தி இது தான். “ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலத்தில் உதிரப் போக்கு அதிகமாக ஏற்படுமானால் சூரத்து ஆலஇம்ரானின் 114வது வசனத்தை மூன்று துண்டுத் தாள்களில் எழுதி ஒன்றை வலது தொடையிலும், மற்றொன்றை இடது தொடையிலும், இன்னொன்றை தொப்புளுக்குக் கீழும் கட்டித் தொங்க விட்டுக் கொள்ள வேண்டும்” பேட்டியாளர் : அஹ்லெ ஹதீசுக்கு வந்த பிறகு நீங்கள் ஏதேனும் சோதனைகளை எதிர்கொள்கின்றீர்களா? முஹம்மது அனஸ் : நாம் பல்வேறு சிந்தனைகளை உடைய மக்களுடன் வாழ்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் நான் குர்ஆன் ஹதீசுக்கு ஒத்தமைந்த நூல்களை என் புத்தக நிலையத்தில் வைக்க ஆரம்பித்தேன். தங்கள் சிந்தனைக்கு மாற்றமான நூல்கள் என்றோ அல்லது ஸலஃபீ நூற்கள் என்றோ தெரிந்தால் போதும், மக்கள் அதைச் சீண்டுவது கிடையாது. அல்லாமா பின் பாஸ் மையம் என்று டெல்லியில் உள்ளது. அங்கிருந்து நான் நூல்களைத் தருவித்தேன். ஆனால் அவற்றை யாரும் வாங்குவது கிடையாது. காரணம்,அந்நூல்களின் ஆசிரியர் லுக்மான் ஸலஃபீ என்பதால் தான். அது தான் நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஆகும். பேட்டியாளர் : நீங்கள் மட்டும் தான் குர்ஆன் ஹதீஸ் படி நடக்க ஆரம்பித்துள்ளீர்களா?அல்லது உங்கள் குடும்பம் முழுவதுமா? முஹம்மது அனஸ் : அல்ஹம்துலில்லாஹ். எனது மனைவி, குழந்தைகள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலேயே தொழுகின்றனர். நாங்கள் ஏற்கனவே கைலானி என்பவர் எழுதிய தொழுகை நூலைப் படித்து முடித்திருக்கின்றோம். இது போல் புத்தகங்களைப் படிப்பதற்காக அன்றாடம் கால் மணி நேர அமர்வை நடத்திக் கொண்டிருக்கின்றோம். பேட்டியாளர் : தங்களுடைய மகளார் (கணவர் வீட்டில்) பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பதாக (மற்றொரு பேட்டியில்) தெரிவித்திருந்தீர்கள். உங்களுடைய மகளார் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையா?அல்லது வேறு பிரச்சனையா? முஹம்மது அனஸ் : கைகளை உயர்த்துவதைத் தவிர்த்து வேறு என்ன விவகாரம் இருக்க முடியும்? விவகாரமே இது தான். தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துவது நபிவழி தான் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டியும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. கைகளை உயர்த்துவது தான் நபிவழி என்று மவ்லானா அப்துல் ஹை லக்னவி, இமாம் முஹம்மது ஆகியோர் தங்கள் நூல்களில் தெளிவாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். அவற்றை நான் போட்டோ காப்பி எடுத்துக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வீண் பிடிவாதத்திலிருந்து விலகுவதாக இல்லை. பேட்டியாளர் : ஷிர்க், பித்அத் போன்ற பாதைகளை விட்டு விட்டு வெளியே வந்து குர்ஆன் ஹதீஸ் என்ற நேரிய வழியைப் பின்பற்றும் உங்கள் மனநிலை எப்படி உள்ளது? நீங்கள் மன திருப்தியுடன் உள்ளீர்களா? முஹம்மது அனஸ் : நிச்சயமாக! நான் முழு திருப்தியுடன் உள்ளேன். எந்த அளவுக்கெனில்,இப்போது நான் இறந்து விட்டால் கூட அல்லாஹ் தன் கருணையால் என்னை ஆரத் தழுவிக் கொள்வான் என்ற முழு நம்பிக்கையில் இருக்கின்றேன். குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் எந்த ஒரு சிறு முயற்சியும் அல்லாஹ்வினால் ஒப்புக் கொள்ளப்படும் என்று நம்புகின்றேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! பளிச்சிடும் பளிங்குக் கண்ணாடி போன்ற தூய்மையான மன நிறைவை நான் பெற்றிருக்கின்றேன். பேட்டியாளர் : உங்களுடைய வியாபாரமே புத்தகம் தான். உங்களது இந்த மாற்றம் உங்களது வியாபாரத் தொடர்புகளையும், வருமானத்தையும் பாதிக்கச் செய்திருக்கின்றதா? முஹம்மது அனஸ் : நிச்சயமாக! ஃபழாயிலே ஸதகாத் (தர்மங்களின் சிறப்புகள்), ஃபழாயிலே ஹஜ் (ஹஜ்ஜின் சிறப்புகள்) என்ற தலைப்பில் உள்ள நூல்களை நான் உருது, ஹிந்தி,ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய நான்கு மொழிகளிலும் அச்சிட்டு விற்பனை செய்தேன். இவை பெருமளவு விற்பனையாயின. உருதுப் பதிப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்குள் 5000பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இப்போது இவற்றை அச்சிடாதது என்னைப் பெருமளவு பாதித்துள்ளது. எனினும் அல்லாஹ் என்னைக் காப்பானாக! நான் பட்டினி கிடக்கும் ஒரு கட்டம் வந்தாலும் சரி தான். அந்த நிலையை நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்வேன். காரணம் ஒவ்வொருவரும் கண் மூடிய பின் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தே ஆக வேண்டும். பேட்டியாளர் : நீங்கள் இது வரை விற்றுக் கொண்டிருந்த அமல்களின் சிறப்புகள் என்ற இந்த நூல்கள் (தர்மத்தின் சிறப்புகள், ஹஜ்ஜின் சிறப்புகள் ஆகியவை இந்நூலின் பாகங்கள் தான்) பல ஷிர்க்கான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாங்கள் தெரிந்திருப்பீர்கள். "ஒரு பெரியார் மறைவான ஞானத்தை அறிகின்றார்'', "(நபி - ஸல் அவர்கள் இறந்த பின்னர்) வானத்தி-ருந்து இறங்கினார்கள்'', "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை கப்ரி-ருந்து வெளியே வந்தது'', "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்ன போது அவர்கள் கூறிய பதிலை நாங்கள் செவியுற்றோம்'' என்று தப்லீக் தலைவர்கள் கூறுகின்ற பிதற்றல்கள் இன்னும் இது போன்ற அப்பட்டமான ஷிர்க்கான கருத்துக்கள் இந்நூற்களில் பொதிந்து கிடக்கின்றன என்று தெரிந்த பிறகு இந்நூல்களைப் பல மொழிகளில் விற்கப் போகின்றீர்களா? முஹம்மது அனஸ் : விற்கப் போவதில்லை. இந்தப் புத்தகங்களை விற்பனை செய்ததையே பாவம் என்று நினைக்கின்றேன். அதனால் வேறெதையும் விற்றாலும் விற்பேனே தவிர இது போன்றவற்றை ஒரு போதும் விற்க மாட்டேன். இந்தப் புத்தகங்கள் அனைத்திற்கும் நானே ஏகபோக உரிமையாளராக இருந்திருந்தால் அன்றே நான் கட-ல் தூக்கி எறிந்திருப்பேன். ஆனால் அதே சமயம் மிக மிக அதிகமான வழிகேடான கருத்துக்களைக் கொண்டுள்ள ஃபழாயிலே அஃமா-ன் இரண்டாம் பாகமான ஃபழாயில் ஸதகா மற்றும் ஹஜ் என்ற நூல்களை நாங்கள் நிறுத்தி விட்டோம். ஃபழாயில் அஃமால் (முதல் பாகத்தையும்) இப்போது இன்ஷா அல்லாஹ் நிறுத்தி விடுவோம். பேட்டியாளர் : எவ்வளவு காலமாக ஃபழாயில் அஃமாலை நீங்கள் அச்சிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்தப் பணியைத் துவக்கியது உங்கள் தந்தையார் தானே! முஹம்மது அனஸ் : என்னுடைய தந்தையார் தான் இதை ஆப்செட்டில் முதன் முதலில் அச்சிட்டார். (இவர்கள் 50 ஆண்டு காலமாக இவற்றை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்) துவக்கத்தில் இவை ஹிக்காயத்-இ-ஸஹாபா, ஃபழாயில்-இ-நமாஸ் (தொழுகையின் சிறப்புகள்) என்று தனித்தனி நூல்களாக அச்சிடப்பட்டன. பின்னர் இவை அனைத்தும் ஒரே வால்யூமாக ஆக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானாவின் "தப்லீக் - இ - நிஸாப்' என்று எனது தந்தையாரால் தான் இப்படி ஒரு பெயர் கொடுக்கப்பட்டது. ஜக்கரியா மவ்லானா அவர்கள் இப்படியொரு பெயரைக் கொடுக்கவில்லை. தப்லீக் - இ - நிஸாப் என்று இவ்வாறு பெயர் கொடுத்ததற்கு பரேலவிகளிடமிருந்து எதிர்ப்புகள் வந்ததும் இதற்கு அமல்களின் சிறப்புகள் என்று பெயரிடப்பட்டது. பேட்டியாளர் : இன்னும் இந்தப் புத்தகத்தை அச்சடித்து விநியோகித்து, விற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு இறுதியாக நீங்கள் என்ன அறிவுரை வழங்க விரும்புகின்றீர்கள்? முஹம்மது அனஸ் : கொள்கையைப் பாழாக்கும் இத்ததைகய புத்தகங்களை விற்று பரப்புவதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஹலாலான ஒன்றல்ல! ஆதாரப்பூர்வமான புத்தகங்கள் நிறைய இருக்கும் போது, புறா சரித்திரங்கள், பச்சைக்கிளி சரித்திரங்களைக் கொண்ட புத்தகங்களை ஏன் விற்க வேண்டும்? (சூஃபிகள் சொன்ன பொய்யான கதைப் புத்தகங்களைக் குறிப்பிடுகின்றார்) இதுபோன்ற புத்தகங்களை விற்பதை விட்டு விட்டு ஆதாரப்பூர்வமான நூல்கள் விற்கப்பட வேண்டும். பேட்டியாளர் : உங்கள் இரு சகோதரர்கள் இந்த நபிவழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா? முஹம்மது அனஸ் : ஆம்! நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் என்னுடைய இளைய சகோதரர் சி.டி.க்களைக் கேட்டு விட்டு தொழுகையில் தக்பீரின் போது இரு கைகளையும் உயர்த்துகின்றார். "தொழுகையில் கைகளை உயர்த்துவது உண்மை என்றிருக்கும் போது நாம் ஏன் அதைப் பின்பற்றுவதற்குப் பயப்பட வேண்டும்? இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நிரூபிக்கப் பட்ட செயலும் நபிவழியும் அல்லவா? அதை நபி (ஸல்) அவர்கள் மரணமாகும் வரை கடைப்பிடித்திருக்கின்றார்கள் அல்லவா? எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த சத்திய நெறியில் இருந்த காரணத்தால் நான் தொழுகையில் கையை உயர்த்த ஆரம்பித்து விட்டேன்'' என்று என்னிடம் என் சகோதரர் கூறினார். பேட்டியாளர் : சத்தியத்தைத் தேடும் பணியில் தப்லீக் ஜமாஅத்தினரையும் அரவணைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? முஹம்மது அனஸ் : குர்ஆன் ஹதீஸ் போதனையைத் தேடுவதும், தங்கள் செயல்கள் குர்ஆன் ஹதீசுக்கு இசைவாக உள்ளனவா? என்று சிந்தித்துப் பார்ப்பதும் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். இது தான் எல்லோருக்கும் தெரிவிக்கும் பொதுவான செய்தியாகும். பேட்டியாளர் : அஷ்ரப் அலீ தானவியின் "அஃமாலே குர்ஆன்' போன்ற நூல்களைத் திரட்டி பரப்புகின்ற தேவ்பந்தி ஆலிம்களுக்கு எதையேனும் கூற விரும்புகின்றீர்களா? முஹம்மது அனஸ் : ஆம்! மவ்லானா அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் அஃமாலே குர்ஆனின் ஆசிரியர் ஆவார். எனினும் யாரோ எழுதிய நூலை அஷ்ரப் அலீ தானவீ எழுதியதாக, பின்னால் சொல்லப் படுகின்றதா? அல்லது உண்மையில் அஷ்ரப் அலீ தானவீ அவர்களே இதை எழுதினார்களா? என்று உறுதியாகத் தெரியவில்லை. அல்லாஹ்வே உண்மையை அறிவான். ஆனால் நான் அந்த நூலில் கண்ட கருத்துக்கள் குர்ஆன் ஹதீசுக்கு நேர் முரணானவையாகும். அதனால் அவற்றை விற்பதை நிறுத்தி விட்டேன். பேட்டியாளர் : உறுதியாக முன்னால் இது யாரோ ஒருவரால் எழுதப்பட்டு பிந்திய காலத்தில் இது அஷ்ரப் அலீ தானவீயால் எழுதப்பட்டது என்று சொல்ல முடியாது. அப்படி அஷ்ரப் அலீ தானவீ அவர்கள் எழுதாததை அவர்கள் எழுதினார்கள் என்று தப்பாக சொல்லப்பட்டிருக்குமானால் அப்போதே தேவ்பந்தி உலமாக்கள் மறுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அஷ்ரப் அலீ தானவீ தான் என்று வக்காலத்து வாங்கிக் கொண்டல்லவா வருகின்றார்கள்? எனவே இது நிச்சயமாக அஷ்ரப் அலீ தானவீ எழுதியது தான் என்பது ஊர்ஜிதமாகின்றது. முஹம்மது அனஸ் : ஜக்கரியா மவ்லானா எழுதிய "ஹிகாயத் அவ்லியா' (வலிமார்கள் வரலாறு) என்ற நூலை நான் படித்த போது பெரிய அதிர்ச்சிக்குள்ளானேன். (பல்வேறு கப்ஸாக்களை உள்ளடக்கிய) இந்நூலுக்கு அஃபாஹே ஸலாஸா என்ற பெயர் வேறு உள்ளது. மொத்தத்தில் 60-70 வகையான புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்வதை நிறுத்தி விட்டேன் பேட்டியாளர் : ஜக்கரியா மவ்லானா எழுதிய ஜிஷ்தியா தரீக்கா வரலாற்றை படித்திருக்கின்றீர்களா? முஹம்மது அனஸ் : நான் அந்த புத்தகத்திற்காக வந்த ஆர்டர்களையும் நிறுத்தி விட்டேன். அல்லாமல் இதுபோன்ற புத்தகங்களில் வரும் தவறான கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்ற (விமர்சன) நூல் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு யாரேனும் இம்மாதிரியான குறிப்புகளைத் தெரிவித்தால் நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து தவறாக இருந்தால் அதை நீக்கி விடுவேன். பேட்டியாளர் : இந்தப் புத்தகங்களின் ஆசிரியர்கள் தேவ்பந்தி உலமாக்கள் மற்றும் பரேலவிகள் ஆவர். அவர்களது கண்மூடித்தனமான பின்பற்றுதல் அவர்களை குர்ஆன் ஹதீஸ் பக்கம் திரும்புவதை விட்டும் தடுக்கின்றது. ஏன்? அவர்கள் சத்தியத்தைத் தெரிந்த பின்னரும் அதை மக்களிடம் எடுத்துரைக்க மறுக்கின்றார்கள். இவர்களுக்கு உங்களது அறிவுரை என்ன? முஹம்மது அனஸ் : மார்க்கம் நமக்கு நபித்தோழர்கள் மூலம் வந்தது. யாரேனும் அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களைத் தேடினால் அவை அவருக்குக் கிடைக்காது. ஆனால் நூறு வருடங்களுக்கு முன்னால் மரணித்த பீர்மார்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்களின் முரீதுகள் எழுதித் தள்ளுகின்றனர். இன்றளவும் நாம் சஹாபாக்களைப் பற்றி நாம் தெரிந்திருக்கவில்லை. (இதை அனஸ் அவர்கள் இங்கு குறிப்பிடக் காரணம், அஷ்ரப் அலீ தானவீக்குரிய வரலாறு நூல்கள் அதிகம் உள்ளன. அவை பத்து பாகங்களாக வெளிவந்துள்ளன.) பேட்டியாளர் : ஒரு பெரிய நூல் வெளியீட்டாளர் என்ற அடிப்படையில் சத்தியத்தைத் தேடுபவர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன? முஹம்மது அனஸ் : உங்கள் செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். அவை குர்ஆன் ஹதீசுக்கு ஒத்து இருக்கின்றனவா? என்று பாருங்கள். தன்னிடத்தில் மக்கள் சொல்வதையெல்லாம் ஒருவர் பின்பற்றக் கூடாது. இது தான் முதன் முதலில் விடுக்கும் செய்தியாகும். இன்று நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை ஆதாரங்களைக் குறிப்பிடுவது கிடையாது. எனவே ஒருவர் ஆய்வு செய்ய வேண்டும். தனது செயல்கள் சரியா? தவறா? என்று (குர்ஆன் ஹதீஸ் மூலம்) உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். (குறிப்பு: 2003 ஆகஸ்டு மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)

No comments:

Post a Comment


நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?


முன்னால் அமெரிக்க நடிகை ''ஸாரா போக்கர்''
Niqab is the new symbol of woman's liberation.

[ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான். நீச்சலுடை அல்ல. - முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் ]
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன். கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து 'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.
''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன். நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன்.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று.
சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான். நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின் குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''
தமிழ் மொழியாக்கம் . எம்.ஏ. முஹம்மது அலீ,
adm. www.nidur.info
[ Sara Bokker is a former actress, model, fitness instructor, and activist. Currently, Sara is director of communications at The March for Justice, a cofounder of The Global Sisters Network, and producer of the infamous Shock & Awe Galleryய©.]
For read in English please click below
:
http://www.nidur.info/en/index.php?option=com_content&view=article&id=153:why-i-shed-bikini-for-niqab-former-actress-sara-bokker-&catid=20:stories-of-new-muslims&Itemid=24

அல்லாஹ்வின் திருமறையும் அண்ணலாரின் வழிமுறையும்


பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் யுவான் ரிட்லியைக் கவர்ந்த இஸ்லாம்


[''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன். செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டும் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டபோது என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன்.... எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ]
அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகள் எவ்வளவுதான் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான பிரச்சாரங்களை மேற்க்கொண்டாலும் இஸ்லாத்தின் அன்பு மற்றும் சமாதானத்தின் நற்செய்தி மக்களால் அடையாளம் காணப்படும் ஒரு நாள் வந்தே தீரும் என பிரபல பத்திரிகையாளரும், சர்வதேச மனித உரிமைப் போராளியுமான யுவானி ரிட்லி கூறினார்.
கேரள மாநிலம் குற்றிப்புரம் ஸஃபா நகரில் ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண்கள் மாநாட்டை துவக்கி வைக்கவிருந்தார் அவர். ஆனால் லண்டனில் இந்திய தூதரகம் அவருக்கு இந்தியா செல்ல விசா மறுத்ததால் வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலமாக மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். "அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்லாத்திற்கெதிராக அவதூறான பிரச்சாரங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை ஆக்கிரமிப்புகளையும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளையும் மறைப்பதற்காகத்தான் இந்தப்பிரச்சாரத்தை மேற்க்கொள்கிறார்கள்.ஃபலஸ்தீனில் துயரத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதற்காகவே என்னை ஏகாதிபத்திய சக்திகள் நோட்டமிடுகின்றன. ஃபலஸ்தீனிலும், ஆஃப்கானிலும், ஈராக்கிலும் கொடூரமான தாக்குதல்கள் மூலமும், கூட்டுக்கொலைகள் மூலமும் குண்டுகளை வீசுவதன் மூலமும் முஸ்லிம்களின் மீது நிரந்தரமாக ஏகாதிபத்திய சக்திகள் போரிட்டு வருகின்றன.
இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்ற மேற்கத்திய வாதிகளின் பொய் பிரச்சாரம் வெற்றிப்பெறாது. ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்களின் வசம் சிக்கிய என்னை இஸ்லாத்தை நோக்கி திருப்பியது அவர்களுடைய கண்ணியமான நடவடிக்கைகளும் சுத்தமான நிலைபாடுகளும் தான். இஸ்லாம் பெண்களுக்கெதிரான மார்க்கம் என்றால் தாலிபான் போராளிகள் என்னிடம் ஒருபோது கண்ணியமாக நடந்துக் கொண்டிருக்க மாட்டார்கள். மேலும் எனது வாழ்வில் அது திருப்புமுனையும் ஆகியிருக்காது.
ஏகாதிபத்தியமும், சியோனிஷமுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல்கள். இவ்விரண்டு சக்திகளும் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல விரோதிகள் மனிதர்கள் அனைவருக்குமே விரோதிகள் தான். முஸ்லிம் பெண்கள் காலக்கட்டத்தின் சவால்களை புரிந்துக்கொண்டு களமிறங்கவேண்டும்." இவ்வாறு ரிட்லி உரையாற்றினார்
தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்....''நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன்.
தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.
என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு ''கெட்ட பெண்'' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையான போது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை'' நானா? அல்லது அவர்களா?)
எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன்.
நான் படிக்கப்படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.
எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.
இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.
மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும்.
மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.
இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்?
பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.
நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன்.
ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. ''வாடகைக்கு'' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள்.
நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான்.
மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் ''பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே'' என்றும் ''பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?'' என்றும் கமெண்ட் அடித்தான்.
ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.
நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன்.. முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.
ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை.
இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?
இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது.. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்ஸ. National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர்.
ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.
இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்:
அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: ''பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.